Current Date:மார்ச் 28, 2024

நீரிழிவு பற்றிய கட்டுக்கதைகளைத் தகர்த்தல்

பொதுவாக நீரிழிவு நோயாளர்கள் உட்கொள்ளும் உணவைப் பற்றி அவதானமாகவும் உணவுக் கட்டுப்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்படுகின்றனர். எனினும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்துரையாடும் போது அவர்கள் நீரிழிவு நோய் பற்றிய பல தவறான கருத்துக்களை இலகுவாக பரப்புகின்றனர். இதனால் நீரிழிவு நோய் குறித்த புரிதல் சமூகத்தில் பாதிப்படைகின்றது. அத்துடன் நோயாளர்களுக்கும் அவர்களைப் பராமரிப்பாளர்களுக்கும் இடையில் பல்வேறு கருத்து முரண்பாடுகளும் ஏற்படுகின்றது.

எனவே தான் நீரிழிவு நோய் குறித்த தகவல்களை யாரேனும் உங்ளுடன் பகிர்கின்ற போது அவற்றை உறுதிப்படுத்தி;க் கொள்வது மிக முக்கியமானதாகும். காரணம் நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்கு அதிகமான கால எல்லை தேவைப்படுகின்றது. அதுமட்டுமல்லாது தொடர்ச்சியான சிகிச்சையும் அவசியப்படுகின்றது.

நீங்கள் கேள்விப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து அவதானமாகவிருங்கள். அத்துடன் உங்களை விழிப்பூட்டுவதற்காக சில கட்டுக்கதைகளை நாம் இங்கே உங்களுடன் பகிர்கின்றோம்.

கட்டுக்கதை 1: நீங்கள் எடை கூடாதிருந்தால் நீரிழிவு நோய் உங்களுக்கு வராது.

உடல் எடைக் குறிகாட்டியானது நீரிழிவு நோய்க்கான ஆபத்தான காரணியாக இருப்பினும், அது ஒரு பொதுக் காரணி அல்ல. பருமனான அனைவருக்கும் நீரிழிவு நோய் உண்டாவதுமில்லை, அதுபோல் சிறந்த உடல் எடையைக் கொண்டவர் தன்னை நீரிழிவிலிருந்து முழுமையாக பாதுகாத்துக்கொள்ளவும் முடியாது. நீரிழிவு நோயினை உண்டாக்கும் பல்வேறு ஆபத்தான காரணிகள் இருந்த போதிலும், அவற்றிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கு ஆரோக்கியமான உணவு, தினமும் உடற்பயிற்சி மற்றும் சிறந்த முறையில் உடல் எடையினை பராமரித்தல் போன்ற முயற்சிகளை மேற்கொள்வது சிறந்தது.

கட்டுக்கதை 2: உங்கள் பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கும் நீரிழிவு இருக்கும்.

மரபியல் (பரம்பரைவழி) என்பது ஒர் ஆபத்தான காரணி தான், எனினும் நீரிழிவானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உண்டாகக்கூடியது. பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருப்பினும், அவர்களின் சந்ததியினர் சிறந்த வாழ்க்கை முறையினைப் பேணுவதன் மூலம் இதனைத் தவிர்த்திட முடியும். சமச்சீரான உணவுப் பழக்கவழக்கம் மற்றும் தினமும் உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கையினை பேணுவதன் மூலம் நீரிழிவினைத் தடுத்திடலாம்.

கட்டுக்கதை 3: நீரிழிவு நோய் ஒரு தொற்றுநோய்.

ஜலதோஷம் அல்லது காய்ச்சல் போன்று நீரிழிவு நோய் தொற்றுவதற்கு இது தொற்றுநோய் அல்ல, அத்துடன் இது காற்று, தொடுகை,  நீர் அல்லது பிற ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவதுமில்லை. பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பின், உங்களுக்கும் நீரிழிவு உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு, அதுமட்டுமல்லாது உடல் எடை அதிகரித்தல், உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (PCOS), மன அழுத்தம்; மற்றும் ஆரோக்கியமின்மை சோர்வு போன்ற காரணிகளால் நீரிழிவு உண்டாகலாம்.

கட்டுக்கதை 4: நிச்சயம் நீரிழிவு நோயாளர்களின் கண்பார்வையும், கைகால்களும் செயலிழக்கும்

இது ஒரு பொய்யான கருத்தாகும் காரணம் அனைத்து நீரிழிவு நோயாளர்களும் கண்பார்வை மற்றும் கைகால்களை இழப்பார்கள் என்பதனை உறுதியாக கூற முடியாது. அத்துடன் கண்கள் மற்றும் கால்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது ஆரோக்கியமாக வாழும் பலரை நீங்கள் கண்டிருப்பீர்கள். நீரிழிவு நோய்கான முறையான தொடர்ச்சியான சிகிச்சை என்பது மிகவும் முக்கியம் ஆகும். அததுடன் நீங்கள் பொறுப்பு மிக்கவர்களாக செயற்பட்டால் பாதிப்புகளிலிருந்து உங்களை உங்களால் பாதுகாத்துக்கொள்ள முடியும். இவற்றுடன் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்;றி பரிந்துரைக்கப்படும் மருந்துகளை உட்கொள்வதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையினையும் பேணுதலும் அவசியம் ஆகும்.

கட்டுக்கதை 5: நீரிழிவு வாழ்க்கையை முழுமையாக ஸ்தம்பிக்க செய்துவிடும்

நீரிழிவு உங்களின் அன்றாட செயற்பாடுகளுக்குத் தடையாக அமையும் என்பது ஓர் ஆதாரமற்ற அனுமானமாகும். நாளாந்தம் உங்களின் குருதிச் சர்க்கரை அளவினைக் கட்டுப்பாடாகப் பேணினால், இயல்பு வாழ்க்கையில் உங்களுக்கு நீரிழிவினால் எதுவித தடையும் ஏற்படாது. பொதுவில் நீரிழிவு நோயானது உங்கள் அன்றாட செயற்பாடுகளை மேலும் சீராக மேற்கொள்ள ஊக்குவிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டுக்கதை 6: நீங்கள் நீரிழிவு நோயாளராகவிருந்தால், இனிப்புச் சுவையினை உண்ணக் கூடாது

இதனை ஏற்பது கடினமாக இருந்தாலும் உண்மை என்னவென்றால் நீரிழிவு நோயாளரின் சர்க்கரை அளவிற்கு ஏற்பவே அவரகள் உட்கொள்ளும் இனிப்பு சுவையும் தீர்மானிக்கப்படுகின்றது. நீங்கள் உண்ணும் இனிப்பின் அளவினை பொதுவான குருதிச் சர்க்கரைப் பரிசோதனைகள்,  மருந்துகள் மற்றும் சிறந்த உணவுப் பழக்கவழக்கம் என்பவற்றின் மூலமாகத் தீர்மானிக்க முடியும். எவ்வாறிருப்பினும் உங்கள் வைத்தியரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது நன்று. ஒர் உணவு தித்திப்பு சுவை கொண்டிருப்பதால், அதில் சர்க்கரை இருக்கிறது என்று அர்த்தமாகாது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள். தற்போது சுக்ரலோஸ் போன்ற சர்க்கரை மாற்றீடுகளானது நீரிழிவு நோயாளர்களின் உணவில் இனிப்பு சுவைக்காக சேர்க்கப்படுகின்றது, அத்துடன் அதனால் கலோரி அதிகரிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன